இந்த விசித்திரத்தைக் கண்டு சட்ட நெறி முறைகளில் நம்பிக்கை கொண்டோர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க முன்வராத நிலையில், தற்போது இந்த வழக்கினை நீதிபதி மைக்கேல் டி. குன்கா விசாரித்து வருகிறார். நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே சொத்துக் குவிப்பு வழக்கினைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்று ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றம் வரை சென்றது தொடர்பாக எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே கூட அதைத் தெரிவித்திருக்கிறேன்.
"கோடநாடு எஸ்டேட்" பற்றி உச்சநீதிமன்றத்தில் 4-4-2008 அன்று சொல்லப்பட்ட ஒருதீர்ப்பு அப்போதே "இந்து" நாளிதழில் வெளி வந்தது. நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த சாலையில் தடுப்பு (கேட்) ஒன்றை அமைத்து, அந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவிற்கு கோடநாடு எஸ்டேட் மானேஜர் தடுப்பதாகவும், அந்தத் தடுப்பினை நீக்கிட வேண்டுமென்றும் கூறி, பொதுமக்கள், கோட்ட வருவாய் அலுவலரிடம் (சப்-டிவிஷனல் மேஜிஸ்திரேட்) முறையிட்டு; அவர் அப்போது பிறப்பித்த ஆணையில், சாலையில் உள்ள அந்தத் தடுப்பினை அகற்றவும், அதையும் 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றிட வேண்டுமென்றும், தவறினால் இந்திய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், அதன் மேலாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். அந்த வழக்கு விசாரணைக்காக முதலில் ஒரு நீதிபதியிடம் போடப்பட்டு, அவர் அந்தக் குறிப்பிட்ட வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, பின்னர் அந்த வழக்கு வேறொரு நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் அப்போதே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட்ட போது, "நீதிபதியை நிர்ணயம் செய்வது என்பது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்" என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆணையிட்டார். அத்துடன் விட்டார்களா என்ன?
அந்த ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திற்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு தான் 4-4-2008 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்பு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கோடநாடு எஸ்டேட் மேலாளருடைய கோரிக்கை நியாயம் அற்றது என்றும், இதுபோன்ற வழக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதி, கோடநாடு எஸ்டேட் வழக்கறிஞரைப் பார்த்து, "உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு இந்த நீதிபதிதான் வேண்டுமென்று வேட்டை ஆடுகிறீர்களா? உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட நீதிபதிதான் உங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோருவதற்கு உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது" என்றும் சொல்லியிருக்கிறார்.
என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக் கூடிய சட்ட நீதியின் சாரம் தோய்ந்த இந்த வார்த்தைகளை யெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்கக் கூடுமென்றுதான் சிலர் எண்ணுகிறார்கள். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் குறிப்பிட்ட நீதிபதிதான் அந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, புதிய நீதிபதி ஒருவர் அங்கே விசாரணையை மேற்கொண்டு வருகிறார். நீதிபதி பாலகிருஷ்ணாதான் சொத்துக் குவிப்பு வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் கோரிக்கை வைத்து, அது நிறைவேறாமல் போனபோதே சட்டம் தன் கடமையைச் சிறப்பாகச் செய்கிறது என்றுதான் எல்லோராலும் கருதப்பட்டது.